பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழா துவக்கம்

 

பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழா துவக்கம்

சிவகங்கை: சிவகங்கை  மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கின்ற அற்புத திருத்தலம் இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர்  குடைவரைக் கோவிலில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக  இக்கோவில் கருதப்படுகிறது .

இக்கோவில் மகேந்திரவர்ம பல்லவ மன்னன்  காலத்திய கோவிலாக இருக்கும் என்றும் சில வரலாற்று நூல்கள் கூருகின்றது.  கேட்ட வரம் அருளும் இந்த கற்பக விநாயகருக்கு தேசிக விநாயகர் என்றும் பெயருண்டு. 

 

தொன்மையில் எருகாட்டூர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம் மற்றும் இராசநாராயணபுரம் என இவ்வூருக்கு பெயர் இருப்பினும் இன்று வரை நிலைத்திருப்பது என்னவோ, பிள்ளையார்பட்டிஎன்பது மட்டும் தான்.  

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள்  விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 

கொடியேற்றம் அன்று காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், கொடிமரம் அருகே உற்சவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசதேவர் ஆகிய சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

 

 

சதுர்த்தி விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

விழாவின் 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி கஜமுகா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் 10-ம் திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும்,

 

மதியம் மூலவருக்கு திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.