பிளாஸ்டிக் தடை: பயன்படுத்த கூடிய/ பயன்படுத்த கூடாத பொருட்கள் எவை? தமிழக அரசு அதிரடி!
புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்ற பல்வேறு கேள்விகள் பலராலும் முன்வைக்கப்படுகிறது.
சென்னை: புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்ற பல்வேறு கேள்விகள் பலராலும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் பிளாஸ்டிக்கில் நல்லது, கெட்டது என்ற இருவகை இல்லை,அனைத்துமே கெட்டதுதான் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து. அந்த அளவிற்கு சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் தீங்கானது பிளாஸ்டிக். அது மட்டுமல்ல உபயோகிப்பவரையும் பதம் பார்க்க பிளாஸ்டிக் தவறுவது இல்லை. இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் பெரும் பங்கை வகித்தது இல்லை. அன்று கடைக்கு பொருட்கள் வாங்க துணிப்பை, சாக்குப்பை எனச் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை கைகளில் இருந்தன. பித்தளை, எவர்சில்வர், கண்ணாடி எனப் பலவகை பொருட்கள் பாத்திரங்களாக, பாட்டில்களாக பயன்பட்டன. கடைகளில் காகித பைகளில் பொருட்களை வாங்கி வந்த காலமும் உண்டு.
அப்படி வரும் காலங்களில் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, அதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை உபயோகிக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது தமிழக அரசு.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்:
- உணவை பார்சல் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் கவர்
- உணவு சாப்பிடும் மேசைகளில் போடப்படும் பிளாஸ்டிக் கவர்
- தெர்மாகோல் தட்டுகள்
- பிளாஸ்டிக் தட்டுகள்
- பிளாஸ்டிக் பூசப்பட்ட தம்ளர்
- பிளாஸ்டிக் கப்
- தெர்மாகோல் தம்ளர்
- தண்ணீர் பாக்கெட்டுகள்
- பிளாஸ்டிக் ஸ்ட்ரா
- பிளாஸ்டிக் பைகள்
- பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
- பிளாஸ்டிக் கொடிகள்
போன்ற பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டு வரும் பொருட்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தடைசெய்யப்படுகிறது
மாற்றுப் பொருட்கள்:
- வாழை இலை
- வாழை இலை தட்டுக்கள்
- அலுமினியம் பூச்சு
- பேப்பர் ரோல்ஸ்
- தாமரை இலை
- கண்ணாடி பொருட்கள்
- மூங்கில் மற்றும் மரம் பொருட்கள்
- பேப்பர் ஸ்ட்ரா
- பேப்பர் மற்றும் துணி பைகள்
- பேப்பர் மற்றும் துணி கொடிகள்
- பீங்கான் பொருட்கள்
- மண்பாண்டங்கள்
போன்ற பொருட்கள் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொருட்களை வீடுகளில் கையாள கூடுதல் கவனம் தேவைப்படும். இதனை மூலமாக வாழ்க்கை சக்கரம் கொஞ்சம் பின்னோக்கி போனாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் முன்னோக்கி நகர்வோம் என்பதே நிதர்சனமான உண்மை.