பிளஸ் 1 மாணவியை காரில் கடத்திய பெண்கள்: சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்

 

பிளஸ் 1 மாணவியை காரில் கடத்திய பெண்கள்: சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்

சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவியை காரில் வந்த மூன்று பெண்கள் பட்டப்பகலில் கடத்தி சென்ற துணிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது

சென்னை: சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவியை காரில் வந்த மூன்று பெண்கள் பட்டப்பகலில் கடத்தி சென்ற துணிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் கண்ணகி தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி, சேலையூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் தட்டச்சு பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே காரில் வந்த மூன்று பெண்கள் அந்த மாணவியை கடத்தி சென்றனர்.

மாணவியை காரில் கடத்திய அந்த பெண்கள், அவரின் வாயில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர். இதனால், உஷாரான அந்த பெண்கள் மாணவியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மாணவியை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சேலையூர் போலீசார், மாணவியை கடத்த முயன்ற பெண்கள் யார்? மாணவியின் வாயில் அவர்கள் ஊற்றிய திரவம் விஷமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மாணவியை கடத்த முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.