‘பிரிட்ஜ் ரூ.200, மைக்ரோ ஓவன் ரூ.100’ சென்னையில் பழைய பொருட்களின் சந்தை…சீக்கிரம் கிளம்புங்க!
ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இந்த சந்தையானது இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யும் சந்தையானது பெசன்ட் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் மக்கள் பயன்படுத்த ஏதுவான பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதில் பிரிட்ஜ் ரூ.200,மைக்ரோ ஓவன் ரூ.100, சோபா செட் ரூ.100, சிறுவர் சைக்கிள் ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஆடைகள், காலணிகள் போன்றவை ரூ10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஒருநாள் மட்டும் 1800 பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ. 22 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த சந்தையானது இன்று மாலை 6 மணி வரை பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடத்திலும், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இந்த சந்தையானது இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள பழைய பொருட்களை இந்த சந்தைக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.