பிராங்க் ஷோ வீடியோ நிகழ்ச்சிகளுக்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

 

பிராங்க் ஷோ வீடியோ நிகழ்ச்சிகளுக்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை: பிராங்க் ஷோ என அழைக்கப்படும் குறும்பு வீடியோ நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

prank show

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக் டாக் செயலி காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலை அதிகரித்து உள்ளது. இந்த செயலி அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் தடை செய்யப்பட வேண்டும்.

மேலும், பிராங்க் ஷோ போன்ற வீடியோக்களால் தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

prank show

இதனை ஏற்ற நீதிபதிகள், இதுபோன்ற ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்ததுடன், பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

tiktok

அத்துடன், டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் வாசிங்க

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva