பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்: புகார் அளிக்காமல் பின் வாங்கியது ஏன்?

 

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்: புகார் அளிக்காமல் பின் வாங்கியது ஏன்?

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் மீது நடிகர் கருணாகரன் புகார் அளிக்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் வராமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் மீது நடிகர் கருணாகரன் புகார் அளிக்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் வராமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம்  அறிவித்த போது நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் கடுப்பான விஜயின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.

இதையடுத்து அண்மையில் நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், கடுப்பேற்றுபவர்களிடம் கம்முன்னு இருக்க வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சில குட்டி கதைகள் கூறியும் அரசியல் தலைவர்களை அவர் விமர்சித்திருந்தார். இது குறித்து  விமர்சித்த  கருணாகரன், ‘குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்’ என விஜய்யை மறைமுகமாகச் சாடினார்.

இதற்கும் விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதற்குப் பதிலளித்துள்ள கருணாகரன், உன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்’ என்றும்  ‘நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களைச் சுத்தப்படுத்த வேண்டும்’ என்று நடிகர் கருணாகரன் நடிகர் விஜய்யை கோபமாக விமர்சித்தார்.

இதனால்  கோபமடைந்த விஜய் ரசிகர் ஒருவர், தொலைபேசி வாயிலாக தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அவர், புகாரளிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கருணாகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க முற்பட்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் புகார் அளிப்பதிலிருந்து கருணாகரன் பின்வாங்கினாரா? அல்லது யாராவது அவரை மிரட்டினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.