பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

 

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து அக்கட்சியினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில்புதுச்சேரியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றார்.

மேலும், பணமதிப்பிழப்பு காரணமாக 2 ஆண்டுகள் இந்தியா இருளில் மூழ்கி உள்ளதாக தெரிவித்த நாராயணசாமி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.