பிரதமர் மோடியின் தலைப்பாகை, ஓவியங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஏலம்!
பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுதில்லி: பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மோடி அந்நாட்டுத் தலைவர்களால் வழங்கப்படும் பரிசுப்பொருட்கள், பிரபலங்களின் சந்திப்பின் போது வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் என சுமார் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்களும் அடங்கும்.
இந்நிலையில் இப்பரிசுப்பொருட்களை இம்மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணையளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் ஏலம் விடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.