‘பிகில்’ போலி டிக்கெட்டுகள்: நான்கு பேர் அதிரடி கைது!
பிகில் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு போலி டிக்கெட்டுகள் விநியோகம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டு தியேட்டர்களில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்து விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறும் போது, ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு 800 டிக்கெட்டுகள் தான் இருக்கும். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். இதனால் சந்தேகமடைந்து சோதனை நடத்தினோம். அப்போது தான் போலி டிக்கெட்டுகள் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மோகன்பாபு, ஆனந்த்ராஜ், போலி டிக்கெட் அச்சடித்த நெல்லை அச்சக உரிமையாளர் உமர் பரூக், உதவியாளர் செல்வின் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 27 ஆயிரம் பணம், சில போலி டிக்கெட்டுகள், கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஏற்கனவே பல முறை இதுபோன்ற போலி டிக்கெட்டுகள் விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.