பா.ஜ. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை களம் இறக்கிய சிவ சேனா: ஷாக்கான பா.ஜ.

 

பா.ஜ. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை களம் இறக்கிய சிவ சேனா: ஷாக்கான பா.ஜ.

மகாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.வும், சிவசேனாவும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இருப்பினும், இரண்டு கட்சிகளும் இணைந்ததுதான் ஆட்சியை அமைத்தன. கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.வை பல்வேறு விஷயங்களில் சிவ சேனா கடுமையாக தாக்கி வந்தது. இதனால் எதிர்வரும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

உத்தவ் தாக்கரே

ஆனாலும் பா.ஜ.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தன. மேலும் தேர்தலுக்கான தொகுதி பங்கீடும் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலையில் கன்கவ்லி தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் நிதேஷ் ரானேவுக்கு எதிராக சிவ சேனா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் வேட்பு மனு திரும்ப பெறும் கடைசி நாளில் கூட சிவ சேனா வேட்பாளர் தனது வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து சிவ சேனா வேட்பாளரை நிறுத்தியது பா.ஜ.வுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நிதேஷ் ரானே

கன்கவ்லி தொகுதியில்  பா.ஜ. சார்பில் போட்டியிடும் நிதேஷ் ரானே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன். நிதேஷ் ரானே முதலில் சிவ சேனாவில்தான் இருந்தார். 2005 ஜூலையில் அப்போது செயல் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேவை வெளிப்படையாக விமர்சனம் செய்ததால் கட்சியிலிருந்து நிதேஷ் ரானே வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து காங்கிரசில் ஐக்கியமான நிதேஷ் ரானே 2017ல் அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். சமீபத்தில் அவர் பா.ஜ.வில் இணைந்தார். பழைய பகையை நினைவில் வைத்து சிவ சேனா சரியான சமயத்தில் நிதேஷ் ரானேவை பழிவாங்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.