பாஸாகப் போறது தெரியாமலே…பரிதவிக்க விட்டுட்டியே…பாவி மகளே…!
தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்: தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள்
எழுதினர். இதில் 38 ஆயிரம் பேர் தனித் தேர்வர்கள் ஆவர். இந்த தேர்வானது கடந்த மார்ச் 14-தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.இதில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவிகித பேரும், மாணவிகள் 97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மதுராந்தகம் தண்டரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்தியா என்பவர் தேர்வில் தோற்று போய்விடுவோம் என்ற பயத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தான் சந்தியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவர் 500க்கு மொத்தமாக 191 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
முன்னதாக தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டது என்று பெற்றோரிடம் புலம்பி கொண்டிருந்த சந்தியா தோல்வி பயத்திலும், மன உளைச்சலிலும் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டோமா இல்லையா என்பது கூட தெரியாமல் மாணவி எடுத்த இந்த அவசர முடிவு குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.