பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

 

பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

டெல்லி: சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக அப்போது பாஜகவில் இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி தனது விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது எம்.எல்.ஏ பதவியும் காலியானது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக இந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.