பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி மேப் முறை : அசத்தும் தெற்கு ரயில்வே..!
தெற்கு ரயில்வே பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி மேப் முறையை அமல்படுத்தியுள்ளது.
சேலம் ரயில் கோட்டத்தின் கீழ் 72 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பேருந்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் குறைவாக இருப்பதாலும், வேகமாகப் பயணம் மேற்கொள்ள முடிவதால் பெரும்பாலான மக்கள் ரயில்களிலே பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ரயிலில் பயணிக்கும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதில், பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயணம் செய்கின்றனர். இவர்களால், ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட இடங்கள் எங்கே இருக்கிறது என்று கண்டுகொள்ளச் சிறிது சிரமப்பட வேண்டியுள்ளது.
இதனால், தெற்கு ரயில்வே பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி மேப் முறையை அமல்படுத்தியுள்ளது. முதன் முதலாக இது, கோவை ரயில் நிலையத்தில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேப், கோவை ரயில் நிலையத்தின் வாசலில் பொருத்தப்பட்டுள்ளதால், பார்வையற்றவர்கள் இதனை எளிதில் கண்டுகொள்ள முடியும். மேலும்,பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்த மேப் மூலம் டிக்கெட் கவுண்டர், தகவல் மையங்கள் போன்றவை ரயில் நிலையத்தில் எங்கே அமைந்துள்ளது என்ற தகவல்களைப் பார்வையற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இது குறித்துப் பேசிய பார்வை திறன் குன்றியவர்கள், இந்த மேப் முறை தங்களுக்கு எளிதில் வழி காட்ட உதவுவதாகவும் , இதே போன்ற சேவைகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்றும் இந்த பிரெய்லி மேப்பை தமிழில் பொருத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.