பார்லி.,-யில் அதிமுக அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

 

பார்லி.,-யில் அதிமுக அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

அதிமுக எம்.பி.,-க்களின் nதொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லி: அதிமுக எம்.பி.,-க்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவை கூடியதும் மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.