பாமக மாவட்ட துணைத் தலைவருக்கு அரிவாள் வெட்டு: சொந்த கட்சிக்குள் அரங்கேறிய வெறிச்செயல்!
பாமக மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: பாமக மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி காசிநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே கட்சியை சேர்ந்த திருத்தணி நகர செயலாளர் சற்குணம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருத்தணி கோல்டன் திரையரங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சுரேஷ் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த சற்குணம் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுரேஷ் சரிந்து விழுந்துள்ளார். அவரை மீட்ட போலீசார், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சற்குணம் உள்ளிட்ட ஐந்து பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.