பாடம் சொல்லும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு!

 

பாடம் சொல்லும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு!

‘கனவு காணுங்கள்.. உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்’ என்று ஒரு தலைமுறையினரைத் தட்டி எழுப்பிய தலைவராக வாழ்ந்தவர் அப்துல் கலாம்.

நமது நாட்டின் உன்னதமான தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இந்த தலைமுறையினர் பள்ளிகளில் பாடம் படிக்கும் போது, குழந்தைகளின் மாமாவாக நேருவைப் படித்தார்கள். எளிமையையின் தலைவராக காமராஜரைப் படித்தார்கள். ஆனால், ‘கனவு காணுங்கள்.. உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்’ என்று ஒரு தலைமுறையினரைத் தட்டி எழுப்பிய தலைவராக வாழ்ந்தவர் அப்துல் கலாம்.

kalam

தினந்தோறும், எத்தனை பணிகள் சூழ்ந்திருந்தாலும், தன் வாழ்வின் இறுதி காலம் வரையில் மாணவர்கள் மத்தியிலேயே இருந்த பெருமையும் அப்துல்கலாமுக்கு உண்டு. தனக்குப் ப்ரியமான மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்து மரணத்தைத் தழுவும் பாக்கியம் எத்தனைப் பேருக்கு கிடைக்கும். அதனால் தான் இந்த தலைமுறை இன்றும் அப்துல்கலாமைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அப்துல்கலாம் அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்தார்.  ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு ஷில்லாங் பகுதியில் உயிரிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை நேர்த்தியானது, உண்மையான உழைப்புடன் அர்ப்பணிப்பும் கூடியது என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கும் படிப்பினையாக விளங்குகிறது.

kalam

இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கி அப்துல் கலாம், குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, இளம் வயதிலே பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித் தாள்களை விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். பின், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு விண்வெளி பொறியில் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

kalam

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  

kalam

இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இன்று வரையில் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக அப்துல்கலாம் போற்றப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். 

kalam

இந்திய மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அப்துல் கலாம்,இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். அவரது எளிமையான வாழ்க்கையும், இனிமையான பேச்சும் இந்தியர்களை மட்டுமல்லாது உலகின் பல நாட்டு மக்களிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” எனும் வாக்கியம் தான் இந்தியாவை வழிநடத்தப் போகும் ஒரு தலைமுறையையே தட்டி எழுப்பி செல்கிறது.