பாஜக வேட்பாளர் தோல்வியால் மொட்டை அடித்து கொண்ட பிரபல இயக்குநர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!?
கேரள பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால், இயக்குநர் ஒருவர் மொட்டையடித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால், இயக்குநர் ஒருவர் மொட்டையடித்துள்ளார்.
கேரளா மாநிலம் சபரிமலை விவகாரத்தைக் கொண்டு அங்கு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று எண்ணியது. தடையை மீறி கூட சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரத்தில் பேசி சர்ச்சைகளில் சிக்கினார்கள் பாஜக வேட்பாளர்கள். ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் அவர்களது கனவுகள் தவிடு பொடியாகி உள்ளது.
குறிப்பாக திருவனந்தபுரத்தில் மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், பத்தனம்திட்டாவில் பாஜக மாநில பொது செயலாளர் சுரேந்திரன், எர்ணாகுளம் தொகுதியில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், திருச்சூர் தொகுதியில் நடிகரும் மாநிலங்களவை எம்பி.யுமான சுரேஷ் கோபி ஆகியோர் களம் கண்டனர். ஆனால், இவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குநரான அலி அக்பர் பிரசாரத்தின் போது, திருவனந்தபுரத்தில் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தால் மொட்டை அடிப்பேன் என்று சவால் விட்டார். ஆனால் தேர்தல் முடிவுகளின் போது கும்மனம் ராஜசேகரன் தோல்வியை தழுவினார். இதனால் சாவல் விட்ட அலி அக்பர் மொட்டையடிக்க வேண்டும் என்று வலைதள வாசிகள் கருத்து கூறினர்.
இதை தொடர்ந்து கடந்த வியாழன் கிழமை அலி அக்பர் மொட்டை அடித்த புகைப்படம் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதில், நான் சபதத்தை நிறைவேற்றி விட்டேன். கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் தோற்பார் என்று நான் நினைக்கவில்லை. அவரின் தோல்வி வருத்தத்தை அளிக்கிறது’ என்றார். இயக்குநர் அலி அக்பரின் மொட்டையடித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.