பாஜகவுடன் கூட்டணி போட்ட ப.சிதம்பரம்… அதிர வைக்கும் மறுபக்கம்..!

 

பாஜகவுடன் கூட்டணி போட்ட ப.சிதம்பரம்…  அதிர வைக்கும் மறுபக்கம்..!

ப.சிதம்பரத்தின் 

வழக்கு, விசாரணை, கைது என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். நாடறிந்த அரசியல்வாதியான ப.சிதம்பரத்தின் மறுபக்கம் எத்தனை பேருக்குத் தெரியும்?

9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த  பெருமை பெற்ற ப.சிதம்பரம், 1945-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில் மிகவும் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பழனியப்பன், தாயார் லட்சுமி ஆச்சி. இவரது தாய்வழி தாத்தா செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைசெட்டியார். இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவரான ராமசாமி செட்டியார், சிதம்பரத்தின் சித்தப்பா. தந்தை பழனியப்பன் ஜவுளி வணிகம் செய்தவர். 

சிதம்பரம் இளம் வயதாக இருக்கும்போதே  அவரது  குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சிதம்பரம், மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி, சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல்., அமெரிக்காவின் ஹார்வர்டுபல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டங்களைப் பெற்றார். 

படிப்பில் சிறந்து விளங்கிய அவர், புகழ்பெற்ற வழக்கறிஞர் பி.எஸ்.கைலாசத்திடம் பயிற்சி வழக்கறிஞராக சேர்ந்தார். கைலாசத்தின் மகள் நளினியை காதலித்து 1968-ல் திருமணம் செய்து கொண்டார். இளம் வயதியேலேயே காங்கிரஸில் இணைந்து செயல்பட்டாலும் அவரது காதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் தந்தை பெரியார். 1968-ல் பரபரப்பாக பேசப்பட்டசிதம்பரம் – நளினி காதல் திருமணத்தை ‘வழிகாட்டித்திருமணம்’ என்று பெரியார் புகழ்ந்துரைத்தார். பத்திரிகைத் துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர்,  1967-ல் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் , இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் , தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் , காங்கிரஸ் அகில இந்திய இணைச்செயலாளர்  என காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராகவும், காரிய கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார். 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 என 7 முறை சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1999 மக்களவைத் தேர்தலில் தமாகா – விசிக – புதிய தமிழகம் கூட்டணியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் – அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வி அடைந்தார். தேர்தல் அரசியலில் சிதம்பரத்தின் முதல் தோல்வி இது.

 2014 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அவர் போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து  2016 ஜூலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-ல் முதல்முறையாக எம்.பி.யான அவர், 1985-ல் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறைதுணை அமைச்சரானார். 

1986 முதல்1989 வரை மத்திய இணை அமைச்சராக இருந்த அவர், பணியாளர் நலன், நிர்வாகசீர்திருத்தம், உள்துறை போன்றபல்வேறு துறைகளை கவனித்தார். 1991 முதல் 1996 வரை நரசிம்ம ராவ் அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) இருந்தார்.

1996-ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்த ஜி.கே.மூப்பனார், தமாகா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். இதற்கு சிதம்பரம் முக்கியகாரணமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 1996-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த தமாகா, 20 எம்.பி.க்களைப் பெற்றது.

 தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையிலும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பணியாற்றினார். 1999-ல் அதிமுக – தமாகா கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது திமுக கூட்டணியில் பாஜகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் 2004-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சிதம்பரம், 2004 முதல் 2014 வரை மன்மோகன்சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை போன்ற முக்கியத்துறைகளின் அமைச்சராக இருந்தார். வழக்கறிஞர், பொருளாதார அறிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட ப.சிதம்பரத்தின் அறிவாற்றல் எதிர்க்கட்சியினரும் வியக்கும் ஒன்று. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். முன்னாள்முதல்வர் கருணாநிதி, இவரை கடுமையாக விமர்சித்திருந்தாலும், பாராட்டவும் செய்துள்ளார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற சிதம்பரத்துக்கு இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. 2014-ல்‘எழுத்து’ என்ற இலக்கிய அமைப்பை தொடங்கியவர், இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களின் படைப்புகள் வெளிவர உதவிவருகிறார். பல்வேறு பத்திரிகைகளில் இவர் எழுதியஅரசியல், பொருளாதார, சமூககட்டுரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.