பாகிஸ்தான் குருத்வாரா செல்லும் முதல் யாத்ரீகர்கள் பட்டியலில் இடம் பிடித்த மன்மோன் சிங், கேப்டன் அமரீந்தர் சிங்

 

பாகிஸ்தான் குருத்வாரா செல்லும் முதல் யாத்ரீகர்கள் பட்டியலில் இடம் பிடித்த மன்மோன் சிங், கேப்டன் அமரீந்தர் சிங்

பாகிஸ்தான் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முதல் யாத்ரீகர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பல முக்கிய வி.ஐ.பி.க்கள் இடம் பிடித்துள்ளனர்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தை கர்தார்பூர் பகுதியில் கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு கர்தார்பூரில் அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி உள்ளது. இதனால் அந்நாட்டுக்கு விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது.

தர்பார் சாஹிப் குருத்வாரா

இதனையடுத்து இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வழித்தடம் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்திய பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அடுத்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அதற்கு அடுத்த நாள் (9ம் தேதி) அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும்  தொடங்கி வைக்க உள்ளனர். நவம்பர் 11ம் தேதி முதல் யாத்ரீகர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொள்ளலாம்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

நவம்பர் 11ம் தேதி தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு செல்ல உள்ள முதல் யாத்ரீகர்கள் பட்டியலை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. மொத்தம 575 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்,  மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஹர்சிம்ரவுத் கவுர் பாதல் மற்றும் பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.