‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

 

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

’காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் மட்டுமல்லாமல் மக்களிடமும், திரை பிரபலங்களிடமும் பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை பார்த்திவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘இலக்கியம் போன்றதொரு சினிமா. மிகவும் ஆழமாக, மனதை சஞ்சலப்படுத்தியதுடன், சிந்திக்கச் செய்தது. எதிரி மிக கொடூரமாக இருக்கிறார். ஜோ கதாபாத்திரம் மனதை வருடுகிறது. சரியான சமயத்தில் மென்மை சேர்க்கிறது. மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு’ என்று ட்வீட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் பாராட்டை பெற்றதையடுத்து பரியேறும் பெருமாள் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.