பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தரக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தரக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.
அதன்படி பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். பின்னர்,வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தன் இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநந்தன் கம்பீர தோற்றத்துடன், மிடுக்காக நடந்து இந்திய எல்லையான அட்டாரி நோக்கி நடந்து வந்தார். அபிநந்தன் தாயகம் திரும்பியதைப் பார்த்தவர்கள் அங்கு கூடியிருந்தவர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் அவரை வரவேற்று மகிழ்ந்தது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் புகலிடம் தரக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிப்பதை வரவேற்கிறோம். ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுதியின்படி, பயங்கரவாதிகளுக்குத் தனது மண்ணில் பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக் கூடாது. பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியையும் பாகிஸ்தான் முற்றிலும் தடுக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.