பத்திரிகையாளர்களை மிரட்டும் அ.தி.மு.க… வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்!- கோவை எம்.பி நடராஜன் வலியுறுத்தல்

 

பத்திரிகையாளர்களை மிரட்டும் அ.தி.மு.க… வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்!- கோவை எம்.பி நடராஜன் வலியுறுத்தல்

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் மறைமுகமாக மிரட்டும் வகையில் கோவையில் பத்திரிகையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். 

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் மறைமுகமாக மிரட்டும் வகையில் கோவையில் பத்திரிகையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். 
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோன வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே அரசின் இதர துறைகளைப்போன்று ஊடகத்துறையினர் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஊக்கத்தொகையை தருகிறோம் என ஒருபுறம் அறிவித்துள்ளது. மறுபுறம் விமர்சனத்தை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கைது செய்வது ஏற்புடையதல்ல. கோவை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் வன்மையான எனது கண்டத்தைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

mp-natarajan-78

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சிம்பிளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது. 
இது அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாக கூறி கோவை மாநகராட்சி துணை ஆணையர் சுந்தர்ராஜ் என்பவரின் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 23.04.2020  காலை, சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலஜியை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல், யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்துள்ளனர். இறுதியாக, இரவு 7 மணியளவில், ஜெரால்ட் மற்றும் பாலாஜியை விடுவித்துள்ள காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியனை கைது செய்துள்ளனர்.

simplicity

அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 
பத்திரிகைத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கிறோம். ஒரு பெருந்தொற்று மக்களின் அன்றாட மக்களின் வாழ்க்கையை முடங்கச்செய்துள்ள நிலையில் ஊடகத்தின் வாயிலாகத்தான் அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் செய்திகளை கடத்த முடிகிறது. இவர்கள் விழிப்புடன் செயல்பட்டால்தான், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் முழுமையாக அவர்களை சென்றடைவது உறுதி செய்யப்படும். இதன் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டை சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய  ரேஷன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின்படி, தனது பணியை செய்த பத்திரிகையாளரை கைது செய்துள்ளது, அரசியல் சாசனத்தை மாதிக்காத செயலாகும். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயலாகும். அடிப்படையில் இது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.  ஆகவே தமிழக அரசு மற்றும் காவல்துறை சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.