பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலை தாக்குதல்: ராகுல் சாடல்

 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலை தாக்குதல்: ராகுல் சாடல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பலரது வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சாடியுள்ளார்

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பலரது வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சாடியுள்ளார்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து அக்கட்சியினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றல் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல். மோசமாக வகுக்கப்பட்டு தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குற்றவியல் பொருளாதார ஊழல். பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. இதுதொடர்பான முழு உண்மைகள் வெளியாகும்வரை மக்கள் ஓய மாட்டார்கள் என்றார்.