பணம் கொடுத்து தான் பாடல்களை பயன்படுத்தினோம்: இளையராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு
96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை: 96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 96. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது அதன் இசை தான். இந்த படத்தின் இசையை இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துத்திருந்தார். படத்தின் நாயகியான திரிஷா கதையில் ஆங்காங்கே இளையராஜா இசையில் ஜானகி பாடல்களைப் பாடியிருப்பார். மேலும் அவர் பின்னணி பாடகி ஜானகியின் தீவிர ரசிகையும் வலம் வருவார்.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் இளையராஜா பேட்டி கொடுத்துள்ளார். அதில் 96 திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றுள்ளதைக் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா,’அது ரொம்ப தவறான விஷயம். ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லையே. எந்த இடத்தில் எல்லாம் அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தர முடியாதது தான். யோதான் கி பாரத் என்ற ஒரு இந்திப்படம். இசை ஆர்.டி.பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்துபோய் எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். கிளைமாக்ஸில் அதேபாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது.
தொடர்ந்து பேசிய அவர், ‘இது அவர்களுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. இது ஆண்மையில்லாத தன்மையாகத்தானே உள்ளது?! ஒரு கதையில் 1980களில் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்க வேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள். இது ஆண்மையில்லாத்தனம்’ என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து 96 படக்குழுவைச் சேர்ந்த ஆர்த்தி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘நாங்கள் பயன்படுத்திய ராஜா சாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ராயல்டி கொடுத்துள்ளோம். அனுமதி பெற்றே பயன்படுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த சிலர் ஏன் இளையராஜா பணம் வாங்கி கொண்டு இது போன்று பேசுகிறார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.