பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

 

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது

டெல்லி: தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, உற்பத்திக்கோ தடை இல்லை என உத்தரவிட்டது.

மேலும்,  இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதையடுத்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுவெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ள நிலையில், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோல், Green Crackers எனப்படும் பசுமை பட்டாசு என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கக் கோரி தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.