‘படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது’ : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்!
லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று ஆளுங்கட்சியை மறைமுகமாகச் சாடினார்.
சென்னை : படம் ஓடவேண்டும் என்பதற்காக அதிமுகவை விஜய் சாடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஜய், சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்படவேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று ஆளுங்கட்சியை மறைமுகமாகச் சாடினார். விஜய்யின் இந்த மாஸ் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். பிறகு நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, ‘பழுத்த மரம் என்பதால் அதிமுக கல்லடி படுகிறது. படம் ஓடவேண்டும் என்பதற்காக அவர் தங்களைத் தாக்குகிறார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்றார்.