பசியால் வாடும் தாயை பார்க்க “2 நாட்கள் சைக்கிள் பயணம்”.. வழியில் உதவிய தன்னார்வலர்கள்.. கலங்க வைக்கும் சம்பவம்!
தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியில் வசித்து வந்த ஜெயகாந்தன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மதுரைக்கு சென்றுள்ளார். கைத்தறி நெசவு தொழில் தொழில் நலிவடைந்ததால், பிழைப்பதற்காக மதுரை சென்றிருக்கிறார். ஆனால் தாராசுரத்தில் தனியாக இருந்து வரும் அவரது தாயாரை மாதத்திற்கு ஒருமுறை வந்து, உணவு பொருட்கள் வாங்கிக் கொடுத்து பார்த்து விட்டு செல்வாராம்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 92 வயதான அந்த மூதாட்டி வெளியே சென்று உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டிலேயே பசியுடன் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்து மனமுடைந்த ஜெயகாந்தன், எப்படியாவது அம்மாவை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அவரது நண்பரிடம் சைக்கிள் வாங்கிக் கொண்டு கடந்த 16 ஆம் தேதி மதுரையில் இருந்து கிளம்பியுள்ளார். தாய் பசியால் வாடுவதை விட பசி, தூக்கம் பெரிதில்லை என இரண்டு நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து தஞ்சை வந்திருக்கிறார்.
வழியில் அவரை விசாரித்த பார்த்த சேவா பாரதி அமைப்பினர், அவருக்கு உதவி செய்துள்ளனர். அந்த உதவிக்கு நன்றி தெரிவித்து விட்டு, மீண்டும் தாராசுரம் நோக்கி சென்றுள்ளார் ஜெயகாந்தன். ஊரடங்கால் மக்கள் தனது குடும்பத்துடன் ஆனந்தமாக இருந்து வரும் இந்த நிலையிலும், பலர் பசியால் வாடும் இது போன்ற சம்பவம் மனதை கலங்க வைக்கிறது.