பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 310 புள்ளிகள் வீழ்ச்சி…

 

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 310 புள்ளிகள் வீழ்ச்சி…

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 310 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றம் கண்டு இருந்தது மற்றும் சீனா நடுத்தர கால கடனுக்கான வட்டியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைத்தது இது போன்ற காரணங்களால் இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவடைந்தது, அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியது போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது.

இந்துஸ்தான் யூனிலீவர்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., நெஸ்லே இந்தியா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எல் அண்டு டி உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. கோடக்மகிந்திரா வங்கி, ஹீரோமோட்டோகார்ப், எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மாருதி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடக் மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,432 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 959 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.119.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 310.21 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 30,379.81 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 68.55 புள்ளிகள் சரிந்து 8,925.30 புள்ளிகளில் முடிவுற்றது.