பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் பணம் ரூ.1.28 லட்சம் கோடி மாயம்! சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி….

 

பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் பணம் ரூ.1.28 லட்சம் கோடி மாயம்! சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் அந்த ஏற்றம் நீண்ட நிலைக்கவில்லை. அதன் பிறகு மளமளவென சரிவு காண தொடங்கியது. பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து இருந்ததால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகம் சரிவுக்கு ஒரு காரணம்.

பவர் கிரிட்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எல் அண்டு டி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. கோடக் மகிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்.டி.பி.சி., டி.சி.எஸ். மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடக் மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 950 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,579 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 182 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.26 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சென்செக்ஸ், நிப்டி சரிவு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 416.46 புள்ளிகள் வீழ்ந்து 41,528.91 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 127.80 புள்ளிகள் சரிந்து 12,224.55 புள்ளிகளில் நிலை கொண்டது.