பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்….. 3 மாதத்தில் 12,700 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்
பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12,692 புள்ளிகளை இழந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளுக்கு இந்த ஆண்டு தொடக்கமே மிகவும் சிறப்பானதாக அமைந்தது. கடந்த ஜனவரி 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்தை (42,273.87) தொட்டது. ஆனால் அதன் பிறகு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் ரூபத்தில் பங்குச் சந்தைகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்களை தனிமைப்படுத்த தொடங்கின. மேலும் இந்தியா உள்பட பல நாடுகள் லாக் டவுன் அறிவித்தன. இதனால் உள்நாட்டு வர்த்தகம் முதல் சர்வதேச வர்த்தகம் வரை கடுமையாக பாதித்தது. மீண்டும் ஒரு உலக பொருளாதார மந்தநிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்தனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்ட முதலீட்டை திரும்ப பெற தொடங்கினர். இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன. கடந்த காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 12,692 புள்ளிகளை பறிகொடுத்தது.
இதுவரையிலான காலத்தில் சென்செக்ஸ் அதிக புள்ளிகளை இழந்த டாப் 5 காலாண்டுகள்
காலாண்டு புள்ளிகள் இழப்பு
2020 ஜனவரி-மார்ச் 12,692
2008 ஜனவரி-மார்ச் 4,621
2008 அக்-டிசம்பர் 3,034
2011 ஜூலை-செப் 2,719
2008 ஏப்ரல்-ஜூன் 2,292