நேர்கொண்ட பார்வை: அஜித்தைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்

 

நேர்கொண்ட பார்வை: அஜித்தைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்

நேர்கொண்ட பார்வை படம் பார்த்த பின்பு திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வை: அஜித்தைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்

சென்னை: நேர்கொண்ட பார்வை படம் பார்த்த பின்பு திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

தல அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன்  சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைச் சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளைப் புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.

நடிகர் அஜித் குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார் !பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்…

பெண்கள் பாதுகாப்பிற்காகத் தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும் .பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிடத் தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.

குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரணதண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது .இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்கத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி
மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை. நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை!’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.