‘நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கு தலைமை பொறுப்பு’ : என்ன சொல்கிறார் மணிசங்கர் ஐயர்?
காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தில் அல்லாத ஒரு தலைவர் ஆவது குறித்து மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தில் அல்லாத ஒரு தலைவர் ஆவது குறித்து மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செல்வாக்கு பெற்ற தொகுதியான அமேதியில் பாஜக நிர்வாகி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதம் இன்னும் காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பொறுப்பு குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கூறும் போது, ‘நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க முடியும். ஆனால் நேரு குடும்பத்திலிருந்து ஒருவர் தலைமை பொறுப்பு வகித்தால் தான் கட்சி வலிமையாக இருக்கும். பாஜகவின் நோக்கம், நேரு குடும்பத்தினர் இல்லாத காங்கிரஸ் கட்சி. அதாவது காங்கிரஸ் இல்லாத பாரதம். அதனால் ராகுல் காந்தி தலைமை பொறுப்பு வகிப்பது தான் சிறந்தது’ என்று கூறியுள்ளார்.