நேரம் வரும் போது நானும் அரசியலுக்கு வருவேன்: நடிகர் விவேக் பேட்டி!

 

நேரம் வரும் போது நானும் அரசியலுக்கு வருவேன்: நடிகர் விவேக் பேட்டி!

நடிகர் விவேக் நேரம் வரும் போது அரசியலில் களமிறங்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

சென்னை: நடிகர் விவேக் நேரம் வரும் போது அரசியலில் களமிறங்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1978-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் பங்கேற்றார். பின்பு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அதில் பேசியதாவது, ‘அனைவருக்கும் வணக்கம்… தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், குளங்கள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் தண்ணீர் பிரச் சினை ஏற்பட்டுள்ளது. மரங்கள் அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டது தான் இதற்குக் காரணம். தொடர்ந்து மரங்களை நாம்  நட வேண்டும். மேலும் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப் பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். 

பள்ளி விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். தற்போது மரக்கன்றுகளை நடவு செய்தால் தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூலம் அதிக மழையைப் பெற முடியும். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மூதாட்டி ஆகி வருகிறது. அரசியான ஊட்டியையும் மூதாட்டியாக மாற்றி வருகிறோம்’ என்று கூறியுள்ளார். 

அதைத்தொடர்ந்து அரசியல் எண்ட்ரி பற்றி விவேக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது, ‘ஏற்கனவே அரசியலில் அதிகம் பேர் உள்ளனர்.நல்ல கருத்துக்களைப் படங்களில் சொல்ல ஆரம்பித்தபோதே நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன். எதிர்காலத்தில் தேவைப்படும் போது நானும் அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன்’ என்று கூறியுள்ளார்.