நேரமில்லை…உலக கோப்பைக்கு செல்ல வேண்டும்: தோனியின் ஓபன் டாக்!?
ஐபிஎல் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.
ஹைதராபாத்: ஐபிஎல் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியான இறுதி போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பான திக்திக் நிமிடங்களுக்கு மத்தியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய தோனி, ‘இந்த இறுதிப் போட்டிக்குச் சிறப்பாக ஆடி வந்தோம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு அணியாக இந்த தொடர் சிறப்பாகவே அமைந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் வழக்கம் போல இந்த போட்டியிலும் கூட பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தினர். உண்மையில் சொல்லப்போனால் இரண்டு அணியும் இந்த போட்டியில் நிறையத் தவறுகளைச் செய்தது. ஆனால் குறைந்த தவறு செய்த அணிக்குக் கோப்பை கிடைத்துள்ளது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்தெந்த இடங்களில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் இப்போது எங்களுக்கு அதற்கு நேரம் கிடையாது. உலக கோப்பைக்குத் தயாராக வேண்டும். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக ஆராய்ந்து பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.