நெருங்கும் திருமணம்: கைது செய்யப்பட்ட மதுவிலக்கு போராளி நந்தினி; உண்மை நிலவரம் என்ன?
மது விலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நந்தினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகியுள்ளார்.
திருப்பத்துார்: மது விலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நந்தினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகியுள்ளார்.
தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து பல நாட்கள் அமைதி முறையில் தனது தந்தையின் துணையுடன் பலமுறை போராடினார். 2014ல், நந்தினியும், அவரது தந்தையும், துண்டுப் பிரசுரம் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று திருப்பத்துார் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நந்தினியும் அவரது தந்தையும் போலீசாரை கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது வழக்கிற்குச் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என, மாஜிஸ்திரேட் சாமுண்டீஸ்வரி பிரபா அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் மதுபானம் உணவுப் பொருளா? என்று கூறி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து ஜூலை, 9 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரையும், மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகிவிட்ட நந்தினி, விரைவில் தனது பள்ளிகால நண்பர் குணா ஜோதிபாசுவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். திருமணம் நெருங்கும் வேளையில் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளது அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.