நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளான பாஜக ட்வீட்!!

 

நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளான பாஜக ட்வீட்!!

தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட ட்வீட், நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது

சென்னை: தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட ட்வீட், நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஜிசாட்-7ஏ செயற்கைக் கோளில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. க்யூ பேண்ட் பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடிய இதனை இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் போர்க்காலங்களில் வான்வழித் தாக்குதல் பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும். இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று (19.12.18) மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

bjptweet

இந்நிலையில், தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘தகவல் தொடர்பில் வளரும் இந்தியா’ என  தலைப்பிட்டு ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் இன்று (20.12.18) மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் ராணுவ பயன்பாட்டிற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஏவப்பட்ட தேதி தவறாக பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. தகவல் தொடர்பில் இந்தியா வளருவது இருக்கட்டும், சரியான தகவலை நீங்கள் முதலில் பதிவிடுங்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனிடையே, நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளன அந்த ட்வீட்டை தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.