நீர் அடித்து நீர் விலகாது… அழகிரியை ஒதுக்கி வைத்து, வைகோவைப் புகழ்ந்த முக ஸ்டாலின்!

 

நீர் அடித்து நீர் விலகாது… அழகிரியை ஒதுக்கி வைத்து, வைகோவைப் புகழ்ந்த முக ஸ்டாலின்!

kalaignar

‘கண்கள் பணித்தது’ என்று கலைஞர் தயாநிதி, கலாநிதி மாறன்களுடனான விரிசலுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்த போது உச்சரித்தார். தயாநிதி, கலாநிதிக்கே கலைஞர் அத்தனை அன்பைக் காட்டும் போது, அவரின் மகன் முக அழகிரி அப்படி என்ன தவறு செய்து விட்டார்? வேறு கட்சிகளில் இருந்துக் கொண்டு, அத்தனைக் கீழ்த்தரமாக எல்லாம் திமுக வை விமர்சனம் செய்தவர்கள் இங்கே இப்போது வந்து இணைந்துக் கொண்டு பதவிகளில் உட்கார்ந்துக் கொள்கிறார்கள்? அழகிரி திமுகவிற்கு எதிராக அப்படி என்ன தான் செய்தார்… ஏன் அவரை மட்டும் இன்னும் கட்சிக்குள் சேர்க்காமல் இருக்கிறார்கள்… முக ஸ்டாலினின் பயம் மட்டும் தான் காரணமா… இல்லை… உதயநிதிக்கு கட்சியைக் கைமாற்றி விடுகிறதில் சங்கடம் நேரும் என்று தயங்குகிறாரா என்று திமுகவில் மீண்டும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

stalin

திராவிட இயக்கத்தின் முன்னோடியும், திமுக வின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க சார்பில் மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “இந்த விழாவில் நான் பங்கேற்றது எனக்கு சிறப்பு, மகிழ்ச்சி மட்டுமல்ல என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். அண்ணா தான் நம்முடைய முகம், நம்முடைய முகவரி. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.  இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் இருக்கிறோம். 

stalin with vaiko

தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்று படுத்தும். அதனால் தான் ம.தி.மு.க மேடையில் ஸ்டாலினும், தி.மு.க மேடையில் வைகோவும் இருக்கிறோம். திமுக வில் எப்படி இந்த ஸ்டாலின் நிரந்தர தளபதியோ அதுபோல் ம.தி.மு.கவில் அண்ணன் வைகோ நிரந்தர போர்வாள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகோ கோபாலபுரத்துக்கு வந்தார். கருணாநிதி உடல்நலிவுற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது வைகோ, அவரை சந்திப்பதற்காக இல்லத்திற்கு வந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கருணாநிதி, வைகோவை அடையாளம் கண்டு கொண்டார். வைகோவின் முகத்தை மறந்திருந்தாலும் அவரது கறுப்புத் துண்டை மறந்திருக்க மாட்டார். கருணாநிதி புன்முறுவல் பூத்தார். வைகோ கண்கலங்கினார். கருணாநிதி, கரத்தை வைகோ பற்றுகிறார். என்னுடைய கரத்தையும் அவர் பிடித்தார். உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாக இருந்தேனோ அதுபோல் தம்பிக்கு, அதாவது எனக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கருணாநிதியிடம் வைகோ அன்று கூறினார். கலைஞருக்கு அளித்த வாக்குறுதிப்படி எனக்கு பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்றால் இந்த ஸ்டாலினுக்கு அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்” என்று ஸ்டாலின் பேசினார்.
இந்த மாநாட்டுக்கு வந்திருந்த மதிமுக, திமுக தொண்டர்கள் தான் ஸ்டாலின், வைகோவைப் பாராட்டி பேசும் போது, ‘ஸ்டாலினைப் பிடிக்காமல் கட்சியை விட்டு விலகிய வைகோவை எல்லாம் பாராட்டி பேசுகிறார்… ஆனால் அழகிரியை மட்டும் ஏன் விலக்கி வைத்திருக்கிறார்? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.