நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பரிதாப பலி!
109 மணி நேரத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாப்: 109 மணி நேரத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி பத்வீர் சிங் என்ற 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்குத் துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாகக் கால் வைத்த பத்வீர் உள்ளே சிக்கிக் கொண்டான். குழந்தையைக் காணாமல் தேடிய பெற்றோர். குழந்தை பத்வீர் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இது குறித்த மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்களுடன் ராணுவத்தினரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேலாக குழந்தையை மீட்கப் போராடினர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 5 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர், இன்று காலை 5.30 மணிக்கு உயிருடன் மீட்கப்பட்டான். 140 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் சாலை மூலமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை பத்வீர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.