நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு உடுமலை கவுசல்யாவுக்கு மீண்டும் பணி!?
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
குன்னூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில், கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது கவுசல்யா நலன் கருதி மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் நிறுவனத்தில் அவருக்குத் தற்காலிக பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து சக்தி என்ற பறை இசைக் கலைஞரை கடந்த டிசம்பர் மாதம் கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிபிசிக்கு பேட்டியளித்த கௌசல்யா, ‘அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.அதனால் தாம் இந்தியாவை ஏற்கவில்லை’ என்றார்.
அவரது கருத்தானது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று புகார் எழுந்தது. இதனையடுத்து கவுசல்யா வெலிங்டன் கன்டோன்மென்ட் நிறுவனத்திலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கவுசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வெலிங்டன் கண்டோன்மெண்ட் தெரிவித்தது.
இந்நிலையில் கவுசல்யா மன்னிப்பு கடிதம் வழங்கியிருப்பதாகவும், அதை ஏற்று மீண்டும் அவருக்குப் பணி வழங்கியிருப்பதாகவும் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் பணியிடை நீக்கம் செய்த கவுசல்யா மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.