நிலமோசடி புகார்: அமலாக்கத்துறை முன் இன்று ராபர்ட் வதேரா ஆஜர்

 

நிலமோசடி புகார்: அமலாக்கத்துறை முன் இன்று ராபர்ட் வதேரா ஆஜர்

ராஜஸ்தானில் நில மோசடி விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகவுள்ளார்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் நில மோசடி விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகவுள்ளார்.

லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட  சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தில்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். அந்த வழக்கு விசாரணையின் போது, வருகிற 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆஜராக கூறினால் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 6, 8 மற்றும் 11ஆகிய தேதிகளில் ராபர்ட் வதேரா ஆஜரானார்.

இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ‘ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி’ என்ற நிறுவனம் ராஜஸ்தானின் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேரா இன்று ஆஜராகவுள்ளார்.