நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! ஆனாலும் 1ம் தேதி தூக்கிலிடுவது சந்தேகம்தான்

 

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! ஆனாலும் 1ம் தேதி தூக்கிலிடுவது சந்தேகம்தான்

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங்கின் curative மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், குற்றவாளி அக்சய் குமார் குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதால், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நாளை மறுநாள் தூக்கிலிடுவது சந்தேகம்தான்

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங் கடந்த திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் curative மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப். நரிமான், ஆர்.பானுமதி மற்றும் அசோக் புஷன் அடங்கிய அமர்வு சேம்பரில் அந்த மனு மீது விசாரணை நடத்தியது. இறுதியில் அக்சய் குமார் சிங்கின் curative மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பவன் குப்தா

curative மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், தூக்கு தண்டனை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு அக்சய் குமார் சிங்குக்கு உள்ளது. மேலும் மற்றொரு குற்றாவளியான பவன் குப்தா இன்னும் curative மனு மற்றும் குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அவர் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் நாளை மறுநாள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவது சந்தேகம்தான்.