நிரவ் மோடியின் கடற்கரை பங்களா வெடி வைத்து தகர்ப்பு!

 

நிரவ் மோடியின் கடற்கரை பங்களா வெடி வைத்து தகர்ப்பு!

வங்கி பண மோசடி புகாரில் சிக்கி தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடிக்கு சொந்தமான கடற்கரை பங்களா வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது

மும்பை: வங்கி பண மோசடி புகாரில் சிக்கி தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடிக்கு சொந்தமான கடற்கரை பங்களா வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனவரி மாத தொடக்கத்திலேயே, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர். அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்து வரும் நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் விடப்பட்டுள்ளது. அதேபோல், நிரவ் மோடிக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தியா வந்தால் என்னை அடித்துக் கொன்று விடுவார்கள் என அச்சம் தெரிவித்து தனது வழக்கறிஞர் மூலம் நிரவ் மோடி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான கடற்கரை பங்களா வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடலோர கட்டுப்பாடு மண்டலம் மற்றும் மாநில கட்டுப்பாட்டு வரம்புகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் அது இடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 33,000 சதுர அடி கொண்ட அந்த பங்களாவின் கட்டுமானம் பலமாக இருப்பதால், கனரக இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பட்சத்தில் பல மாதங்களாக வாய்ப்புள்ளது. எனவே, வெடி வைத்து தகர்த்ததாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.