நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

-குமரன் குமணன்

மவுங்கானுய்: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

ஷிகர் தவன் ரோகித் ஷர்மா இருவருமே சிறப்பாக விளையாட, முதல் விக்கெட் கூட்டணி 154 ரன்கள் குவித்தது. 25ஆம் ஓவரின் இரண்டாம் பந்தில், தவன் ஆட்டமிழந்தார். 67 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். உண்மையில் ஆட்டமிழந்த பந்தை அவர் தொடாது விட்டிருந்தாலும் எதுவும் ஆகியிருக்காது. டிரென்ட் பௌல்ட் லாதம் இருவருமே இந்த விக்கெட் இப்படி விழும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த தருணத்திலிருந்து அடுத்த 25-வது பந்தில், தேவையின்றி தூக்கி அடித்த ஓரு பந்தை டி கராண்ட்ஹோம் கேட்ச் செய்ய, ஃபெர்குசனுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. கிரிக்கெட்டில் துரதிஷ்ட எண்ணாக நம்பப்படும் 87 ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

இதன்பிறகு 39ஆவது ஓவரின் முதல் பந்தில் கோலி ஆட்டமிழந்த வரை, அதாவது ஸ்கோர் 236 ரன்களை எட்டும்வரை சீரான நிலையில் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. புல் ஷாட் ஒன்றை ஆட முயன்ற கோலி 45 பந்துகளில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளாக 46 ,45 ,43 என நாற்பதுகளில் ஆட்டமிழந்து வரும் கோலியின் இன்றைய இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் வந்தன. 40 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

ஒரு முனையில் ராயுடு நீடித்து நிற்க, 5ஆம் பேட்ஸ்மேனாக வந்த தோனி, மீண்டும் ஓரு சிறப்பான பங்பளிப்பை அளிக்க தொடங்கினார் . இந்நிலையில் ராயுடு ஆட்டத்தின் 45-ஆம் ஓவரின் நான்காம் பந்தில் ஃபெர்குசன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 49 பந்துகளில் 47 ரன்களை 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் எடுத்தார் ராயுடு.

இதன் பிறகு வந்த கேதார் ஜாதவ், தான் சந்தித்த பத்து பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். தேனி 33 பந்துகளில் 48 ரன்களை 5 பவுண்டரிகள் மற்றும் ஓரு சிக்சருடன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியால் வலுவான கூட்டணிகளை கட்டமைக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து. இதனால் அவர்கள் அவ்வப்போது காட்டிய அதிரடி எடுபடவில்லை. அதிகபட்சமாக டக் ப்ரேஸ்வல் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்தார். அவரை தவிர லாதம் (34) “காலின் மன்றோ (31) ஆகியோர் மட்டுமே முப்பது ரன்களை கடந்தனர். 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டது.

கடந்த போட்டியை போலவே இப்போட்டியிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் குல்தீப் யாதவ். புவனேஸ்வர் குமார் மற்றும் சஹால் ஆகியோருக்கு தலா இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன. ஷமியும் ஜாதவ்வும் தலா ஓரு விக்கெட்டை எடுத்துக்கொண்டனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி இதே மைதானத்தில் வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.