நித்தியானந்தா சிஷ்யையின் அதிர்ச்சி வீடியோ… உயிருக்கு ஆபத்து என கூறியது ஏன்?
இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள்கடத்தல் என பல வழக்குகள் குஜராத், கர்நாடக நீதிமன்றங்களில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா, நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டிலிருந்து தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் கடந்த 27 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். அதில், எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பமில்லை. நாங்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றனர்.ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 16 ஆம் தேதிக்குள் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து, அடுத்த வீடியோ வெளியிடுவதற்குள் தான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ எனத் தெரியவில்லை என்று தத்துவப்ரியா பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து அகமதாபாத் விவேகானந்த நகர் போலீசாரிடம் ஜனார்த்தனா ஷர்மா புகார் அளித்துள்ளார்.
தற்போது இதற்கு விளக்கமளித்து தத்துவப்ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த வீடியோ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. தற்போது தனக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 10ம் தேதிக்குள் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை தெரிவிக்கும்படி கர்நாடக மாநில போலீசாருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .