நிதிஷ் குமாரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது: மத்திய அமைச்சரை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்

 

நிதிஷ் குமாரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது: மத்திய அமைச்சரை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்

பீகாரின் முதல்வர் நிதிஷ் குமாரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஐக்கிய ஜனதா தள கட்சி கடுமையாக தாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பீகார் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இயற்கையின் கோர தாண்டவத்துக்கு அப்பாவி மக்களும் பலியாகினர். தற்போது அந்த மாநிலத்தில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை போனில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி முடிந்த அளவு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்து இருந்தார்.

பீகார் வெள்ளம்

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று பா.ஜ.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேட்டி ஒன்றில், வெள்ள சூழ்நிலையை கையாள்வதில் முதல்வர் நிதிஷ் குமார் திறமையற்றவர் என தாக்கி பேசி இருந்தார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ. கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணியை சேர்ந்த கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர் முதல்வரை விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிதிஷ் குமார்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு ஜனதா தளம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் இது தொடர்பாக நேற்று பேட்டி ஒன்றில் கூறுகையில், நிதிஷ் குமாரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் ஆகமாட்டார். மகாதேவ் (சிவன்) பெயரை ஒவ்வொரு முறையும் உச்சரிப்பதன் மூலம் உருவர் தலைவராவதில்லை என தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் எப்போதும் பேசுகையில் அடிக்கடி இந்து கடவுள் பெயரை சொல்வது வழக்கம். அதை குறிப்பிட்டுதான் சிவன் பெயரை ஒவ்வொரு முறையும் சொல்வதனால் ஒருவர் தலைவராவதில்லை என்று மறைமுகமாக கிரிராஜ்  சிங்கை சஞ்சய் சிங் தாக்கியுள்ளார்.