நிதிப்பற்றாக்குறை நிலவும் நேரத்தில் மத்திய அரசை கைவிட்ட ஜி.எஸ்.டி. வசூல்….

 

நிதிப்பற்றாக்குறை நிலவும் நேரத்தில் மத்திய அரசை கைவிட்ட ஜி.எஸ்.டி. வசூல்….

4 மாதங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் சராசரி வருவாய் அளவான ரூ.1 லட்சம் கோடிக்கு சிறிது குறைந்தது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

வரி வசூல் வருவாய்

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 3 மாத காலத்தில் மாதந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை உண்டாக்கியது. இருப்பினும் 2019 நவம்பர் முதல் 2020 பி்ப்ரவரி வரையிலான கடந்த 4 மாதங்களாக  ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

ஜி.எஸ்.டி. வசூல்

இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி.  வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு சிறிது குறைந்தது. உள்நாட்டில் பரிமாற்றம் குறைந்தது மற்றும் இறக்குமதி குறைந்தது போன்ற காரணங்களால் 2020 மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலான  வசூல் ரூ.97,597 கோடியாக குறைந்தது. இது 2019 மார்ச் மாதத்தை காட்டிலும் 8.4 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் ரூ.1.06 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாக கிடைத்து இருந்தது. நிதிப்பற்றாக்குறையால் மத்திய அரசு தவித்து வரும் வேளையில், ஜி.எஸ்.டி.  வசூல் குறைந்துள்ளது மத்திய அரசுக்கு மேலும் நிதிநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.