“நான் ஃபைட்டர் கிடையாதுப்பா, ஒன்லி பில்டப்புப்பா” கதறும் அமைச்சர் விஜயபாஸ்கர்

 

“நான் ஃபைட்டர் கிடையாதுப்பா, ஒன்லி பில்டப்புப்பா” கதறும் அமைச்சர் விஜயபாஸ்கர்

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, சொன்ன மாதிரியே ஜெயிச்சு வந்து பீதிய கிளப்புனா என்னப்பா நியாயம்? நீ நினைக்கிற மாதிரி நான் ஃபைட்டரு கிடையாதுப்பா, ஒன்லி பில்டப்புப்பா” என செந்தில் பாலாஜி காலில் விழுந்து விஜயபாஸ்கர் கதறினாரா தெரியாது. போகட்டும்.

திமுகவில் ஆரம்பித்து, அதிமுகவிற்கு லாங் ஜம்ப்பாகி, அங்கிருந்து அமமுகவிற்கு ஹை ஜம்ப் அடித்து, கடைசியாக திரும்பவும் திமுகவிற்கு பேக்ஃப்ளிப் அடித்து அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜி, தற்போதைய அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சவால் விடுத்துள்ளார். பதினெட்டு எம்.எல்.ஏக்கள் பதவிபறிப்புக்கு காரணமான வேதாளம் தினகரனின் வீரத்திற்கு விசுவாசமாக மற்ற 17 பேரும் இருந்துவிட, செந்தில் பாலாஜி மட்டும் விவேகத்துடன் நடந்து திமுகவிற்கு தாவி, வேட்பாளராகி, இப்போது சட்டமன்ற உறுப்பினருமாகிவிட்டார்.

Senthil Balaji

தேர்தலுக்கு முன்பாக, செந்தில் பாலாஜியை டெப்பாசிட் இழக்க வைப்பதாகவும், முடியாவிட்டால் பதவி விலகுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சவால் விட, செந்தில் பாலாஜி அசால்ட்டாக வென்றுள்ளார்.

Vijaya Baskar

வென்றவர் சும்மா இருப்பாரா? “சொன்ன மாதிரி ஜெயிச்சு காட்டிட்டேன், நீங்க சொன்னமாதிரி பதவி விலகுனா, உங்க கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமில்லையா, அப்பவும் எங்க கட்சிய ஜெயிக்க வைக்கிறேன், விலகுறீங்களா” என இன்னொரு கிட்னிக்கும் அடிபோட, “சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, சொன்ன மாதிரியே ஜெயிச்சு வந்து பீதிய கிளப்புனா என்னப்பா நியாயம்? நீ நினைக்கிற மாதிரி நான் ஃபைட்டரு கிடையாதுப்பா, ஒன்லி பில்டப்புப்பா” என செந்தில் பாலாஜி காலில் விழுந்து விஜயபாஸ்கர் கதறினாரா தெரியாது. போகட்டும்.

அரவக்குறிச்சி கூத்து இதுவென்றால், கொங்கு மண்டலத்தில் வேறொரு காமெடி.  அதிமுக ஆட்சியை தங்களின் புஜபல பராக்கிராமத்தால் தூக்கி நிப்பாட்டி இதுநாள்வரை காத்துவருவதாக‌ பில்டப்போடு வளையவருபவர்கள்  அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி.

Velumani Thangamani

காலங்காலமாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற இறுமாப்பினாலோ என்னவோ, மணிகள் மட்டுமன்றி மற்ற அமைச்சர்களும் சற்றே சாவகாசமாக தேர்தல் வேலை செய்ய, திமுக இறங்கி அடித்து வெற்றி பெற்றிருக்கிறது கொங்கு மண்டலத்தில்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளான தொண்டாமுத்தூரில் அதிமுகவைவிட திமுக 21,091 வாக்குகளும், கிணத்துக்கடவில் 30,980 வாக்குகளும், பொள்ளாச்சியில் 25,806 வாக்குகளும், வால்பாறையில் 29,416 வாக்குகளும், உடுமலைபேட்டையில் 40,643 வாக்குகளும், மடத்துக்குளத்தில் 25,354 வாக்குகளும் கூடுதலாக பெற்றுள்ளது.  பொள்ளாச்சி  நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பெற்ற வாக்குகள் 3 லட்சத்து 77,546, அதேநேரம் திமுக பெற்றது 5 லட்சத்து 50,905 வாக்குகள். அதாவது, இரு கட்சிகளுக்குமான வித்தியாசம் ஒரு லட்சத்து 73,359.

Palanisamy

நம்முடைய சொந்த தொகுதிகளில் இவ்வளவு மோசமாக தோற்றிருக்கிறோமே, முதலமைச்சர் எடப்பாடி கொலையா கொல்லுவாரே என பயந்துகொண்டே எடப்பாடியாரை சந்திக்க சென்றால், அங்கே அவர் சோகமே வடிவாக‌ அமர்ந்திருந்தாராம். காரணம் கேட்டால், எடப்பாடியார் வாக்களித்த சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் அதிமுகவைவிட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்ற தகவல் அப்போதுதான் அவருக்கு கிடைத்ததாம்.