நானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க! மாயாவதி பரபரப்பு தகவல்

 

நானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க! மாயாவதி பரபரப்பு தகவல்

தான் புத்தமதத்துக்கு மாற போவதாகவும், தன்னுடன் நிறைய பேர் அந்த மதத்துக்கு மாற போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திடீரென அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து மாயாவதி தேர்தலை சந்தித்தார். எதிரும், புதிருமாக இருந்த 2 கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றியை குவித்து விடலாம் என எண்ணத்தில் மாயாவதி கூட்டணி அஸ்திரத்தை கையில் எடுத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. மாயாவதி கூட்டணியை மக்கள் புறக்கணித்து விட்டனர்.

புத்தர் (ஓவியம்)

இந்நிலையில், மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மாயாவதி தான் விரைவில் புத்தமதத்துக்கு மாற உள்ளதாக திடீரென அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாபாசாகேப் தனது மறைவுக்கு முன் புத்தமதத்துக்கு மாறினார். பாபாசாகேப்பின் வழியை பின்பற்றி பேகன்ஜியும் புத்தமதத்துக்கு மாறியதை இப்போது நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள். இந்த விஷயத்தில் என்னுடைய பதிலும் புத்தமத தீட்சை பெறுவேன் என்பதுதான். ஆனால் சரியான நேரத்தில் புத்தமதத்துக்கு மாறுவேன்.

அம்பேத்கர்

என்னுடன் ஏராளமான மக்கள் புத்தமதத்துக்கு மாறுவார்கள். பாபாசாகேப்பை பின்தொடருபவர்கள், அரசியல் களத்தில் அவரது தடத்தை பின்தொடர்ந்தால் இந்த மதமாற்றம் சாத்தியம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாயாவதி புத்தமதத்துக்கு மாற இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.