நாச்சியார்கோவிலில்  காற்றை சுவாசிக்கும் கல் கருட சேவை!

 

நாச்சியார்கோவிலில்  காற்றை சுவாசிக்கும் கல் கருட சேவை!

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கல் கருட சேவை நடைபெற்றது.

தஞ்சாவூர்: 

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள்கோயிலில் அமைந்துள்ளது . 

kalkarudan

108 திவ்ய தேசங்களில் 20 ஆவது  ஸதலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த ஸதலமாகவும் விளங்குவது நாச்சியார்கோயில் சீனிவாசபெருமாள் கோயிலாகும். 

இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெற்றது.

இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கல் கருடசேவை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நேற்று மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர். 

kalgarudan

கருடபகவான் மண்டபம் எழுந்தருளிய பொழுது  ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.

பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கருடசேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர். 

kalkarudan

இதையடுத்து எட்டாம் நாள் விழாவாக வரும் 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும், அதனைத் தொடர்ந்து வெண்ணைத்தாழி அலங்காரமும்,19 ஆம்தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.