நாங்களும் சளைத்தவர்கள் இல்லை.. ஸ்டிக்கர் ஒட்டுவதில் டஃப் கொடுக்கும் பாஜக..!

 

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை.. ஸ்டிக்கர் ஒட்டுவதில் டஃப் கொடுக்கும் பாஜக..!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களில் தமிழிசை ஸ்டிக்கர் ஒட்டி, பாஜகவினர் அசத்தியுள்ளனர்.

சென்னை: கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களில் தமிழிசை ஸ்டிக்கர் ஒட்டி, பாஜகவினர் அசத்தியுள்ளனர்.

பேரிடர் காலங்களில் கொடுக்கப்படும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை அறிமுகம் செய்து வைத்தவர்கள் அதிமுகவினர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், யார் யார் அனுப்பிய நிவாரண பொருட்களில் எல்லாம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி அவப்பெயரை ஈட்டியது தான் மிச்சம்.

இருப்பினும், அதன் பின் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காலங்களிலும் சரி, அதிமுக தலைமை மாறியதற்குப் பின்னும் சரி ஸ்டிக்கர் ஒட்டுவதை அவர்கள் கைவிட்டபாடில்லை. ஆளுங்கட்சியினரின் இந்த செயல், பாதிக்கப்பட்ட மக்களின் முகத்தைச் சுழிக்க வைத்தாலும், அதை அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

இது இப்படி இருக்க, அதிமுகவை மறைமுகமாக இயக்கப்படுவதாக சொல்லப்படும் தேசிய ஆளும் கட்சியான பாஜகவும், அதிமுகவிற்கு போட்டியாத தற்போது களமிறங்கியுள்ளது.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக பாஜக சார்பில் அனுப்பப்பட்ட அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி அனுப்பியுள்ளனர்.

“இந்த நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டவுடன், அதில் இருக்கும் தலைவர்களின் புகைப்படத்தைப் பார்த்து மக்கள் அவர்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று யாரோ நகைச்சுவையாகக் கூறியதை அப்படியே நம்பி விட்டார்கள், பாவம் பாஜகவினர்!” என சமூகவலைதளவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.